நவமலை சாலையை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு


நவமலை சாலையை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:45 PM GMT)

நவமலை சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மலைவாழ் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்கிடையில்அந்த சாலையை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்டது நவமலை வனப்பகுதி. இங்கு மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதை தவிர மின்வாரிய குடியிருப்பில் அலுவலர்கள் குடும்பத்துடன் தங்கி இருக்கின்றனர். மேலும் நவமலைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.


மின்வாரிய அலுவலர்கள், வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை வாகனங்கள் அந்த சாலையில் சென்று வருகின்றன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநபர்களுக்கு நவமலை செல்ல அனுமதி இல்லை. இதற்கிடையில் அந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மலைவாழ் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் வாகன ஓட்டிகளும்கடும் அவதிப்படுகின்றனர்.


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொள்ளாச்சி-வால்பாறை ரோடு குரங்கு நீர்வீழ்ச்சியில் இருந்து நவமலை செல்லும் சாலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது சாலை பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. சில இடங்களில் சாலை இருந்தற்கான அடையாளமே காணாமல் போய் விட்டது. எனவே நவமலை சாலையை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், வால்பாறை ரோட்டில் இருந்து நவமலை வரை உள்ள சாலை 6 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, தற்போது ரூ.2 கோடியே 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளது என்றனர்.



Next Story