மேலும் ஒரு கிரைண்டர் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் மோசடி


மேலும் ஒரு கிரைண்டர் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 5 Sept 2023 12:45 AM IST (Updated: 5 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மேலும் ஒரு கிரைண்டர் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் மோசடி

கோயம்புத்தூர்

சிங்காநல்லூர்

கோவை சிங்காநல்லூரில் மேலும் ஒரு கிரைண்டர் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனம்

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் குமார் (வயது 46). இவர் திருச்சி ரோடு அய்யர் லே-அவுட் அருகே கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு கோவையை சேர்ந்த சக்திவேல் என்பவர் மேலாளராகவும், ரம்யா, ஜெயக்குமார், சுப்புலட்சுமி ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், இவர்கள் 4 பேரும் சேர்ந்து வாடிக்கையாளர்களிடம் வாங்கும் பணத்தை கிரைண்டர் நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் செலுத்தாமல் மேலாளர் சக்திவேலின் மனைவி அகிலாண்டேஸ்வரி என்பவரின் வங்கி கணக்கில் செலுத்தியதாக தெரிகிறது. இதுபோன்று அவர்கள் மொத்தம் ரூ.25 லட்சம் வரை அகிலாண்டேஸ்வரியின் வங்கிக்கணக்கில் செலுத்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

5 பேர் மீது வழக்கு

இந்த மோசடி குறித்து கிரைண்டர் நிறுவன உரிமையாளர் குமாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் தனது நிறுவனத்தில் மோசடி செய்த பணத்தை திரும்ப கேட்டு உள்ளார். அப்போது அவர்கள் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் இது குறித்து குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் மோசடி, நம்பிக்கை மோசடி, சதி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நிறுவன மேலாளர் சக்திவேல், அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி, ஊழியர்கள் ரம்யா, ஜெயக்குமார், சுப்புலட்சுமி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் குமாரின் தந்தை முத்துசாமி நடத்தி வரும் கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனத்திலும் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக அங்கு பணியாற்றிய 4 ஊழியர்கள் மீது கடந்த வாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story