குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் விபத்தில் பலி
![குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் விபத்தில் பலி குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் விபத்தில் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/08/04/1429004-kdm.gif)
கடையநல்லூர் அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில், குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
கடையநல்லூர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு மலையடிப்பட்டி சவுந்தரபாண்டியன் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ண பெருமாள். இவர் ராஜபாளையம் நகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சிவகுமார் (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
சிவகுமார், அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவரின் மகன் ராஜ்குமார் (26) உள்பட தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தனர். மோட்டார் சைக்கிளை சிவகுமார் ஓட்டினார்.
அவர்கள் நேற்று அதிகாலை 3 மணியளவில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குமந்தாபுரம் பகுதியில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்தது. இதில் சிவகுமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் ராஜ்குமார் படுகாயம் அடைந்தார். இன்னொருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிவகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சிவகுமாரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.