கேரட் கொள்முதல் விலை உயர்வு


கேரட் கொள்முதல் விலை உயர்வு
x
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:46 PM GMT)

கோத்தகிரி பகுதியில் கேரட் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் கேரட் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

கேரட் அறுவடை

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்தது. இதனால் விவசாயிகள் பயிர்களுக்கு ஸ்ப்ரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சவில்லை. போதுமான மழை பெய்ததால் தோட்டங்களில், காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்தன.

தொடர் மழை காரணமாக கேரட் பயிர்கள் அழுகி, வெடிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் கேரட்டுகளை அறுவடை செய்து விற்பனைக்காக காய்கறி மண்டிகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரத்து அதிகரித்ததால், கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்தது. தற்போது கேரட் கொள்முதல் விலை சற்று அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

கிலோ ரூ.45-க்கு கொள்முதல்

இதுகுறித்து ஈளாடா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது,

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தோட்டங்களில் கேரட் பயிரிட்டோம். இன்னும் சில நாட்களில் கேரட் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும். கடந்த வாரம் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.30-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இந்த கொள்முதல் விலை கட்டுப்படி ஆகவில்லை. எனவே, விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தோம்.

தற்போது கேரட் கொள்முதல் விலை அதிகரித்து, கிலோரூ.45-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் கொள்முதல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விளைநிலங்களில் தண்ணீர் தேங்காமலும், கேரட் அழுகாமல் இருக்கவும் தோட்டங்களில் மழைநீர் வழிந்தோடும் வகையில் சிறிய கால்வாய்களை அமைத்து உள்ளோம் என்றார்.


Next Story