'செமிகண்டக்டர்' உயர் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது


செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது
x

தமிழகத்தில் ‘செமிகண்டக்டர்’ உயர் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சிங்கப்பூரின் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசின் சார்பாக வழிகாட்டி நிறுவனத்திற்கும் இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை,

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் 'செமிகண்டக்டர்' உயர் தொழில்நுட்பப பூங்காவை அமைக்க உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் 1-ந் தேதி (நேற்று), தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தில் 25 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. சர்க்யூட் வடிவமைப்பாளர்கள், உற்பத்தி பொருள் வினியோகஸ்தர்கள், உபகரண வினியோகஸ்தர்கள் மற்றும் செமிகண்டக்டர் அவுட்சோர்சிங் மற்றும் பரிசோதனை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான திட்டங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்படும். இதன் காரணமாக உருவாகக்கூடிய சூழல் அமைப்புகளின் மூலம் 25 ஆயிரம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ஐஜிஎஸ்எஸ்வி நிறுவனம், ப்ராஜெக்ட் சூரியா என்ற பெயரில் செமிகண்டக்டர் புனையமைப்பு திட்டத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்தியாவில் செமிகண்டக்டர் புனையமைப்பு திட்டங்களை அமைப்பதற்கான மத்திய அரசின் "இந்தியா செமிகண்டக்டர் மிஷன்" திட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளித்துள்ளது.

பங்கேற்றோர்

இந்நிகழ்ச்சியின்போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பூஜா குல்கர்னி, ஐஜிஎஸ்எஸ்வி நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கமலக்கண்ணன், நரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story