ஆற்றில் மூழ்கி மூதாட்டி சாவு


ஆற்றில் மூழ்கி மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 2 July 2023 6:45 PM GMT (Updated: 3 July 2023 9:05 AM GMT)

கொரடாச்சேரி அருகே ஆற்றில் மூழ்கி மூதாட்டி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்

மூதாட்டி

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம் மங்களாபுரம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் எத்திராஜ். விவசாயி. இவரது மனைவி தையல்நாயகி (வயது 67). இவர் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் தையல்நாயகியை திடீரென காணவில்லை. காணாமல் போன மூதாட்டியை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

ஆற்றில் மூழ்கி சாவு

நேற்று கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் பாண்டவையாறு சுடுகாட்டு கரையோரம் மூதாட்டி உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. மூதாட்டி ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தையல்நாயகி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்களிடம் மூதாட்டி உடலை போலீசார் ஒப்படைத்தனர். மூதாட்டி மருத்துவ சிகிச்சைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story