பல்பொருள் விற்பனை அங்காடியில் ரூ.42 ஆயிரத்தை திருடிய மூதாட்டி

கறம்பக்குடியில் பல்பொருள் விற்பனை அங்காடியில் ரூ.42 ஆயிரத்தை மூதாட்டி திருடினார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கறம்பக்குடி:
பல்பொருள் அங்காடியில் திருட்டு
கறம்பக்குடி சுலைமான் நகர் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 42). இவர் கறம்பக்குடி கடைவீதியில் பல்பொருள் விற்பனை அங்காடி நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறந்த சிறிது நேரத்தில் வாடிக்கையாளர் கேட்ட பொருளை எடுப்பதற்காக கடைக்கு அருகில் இருந்த குடோனுக்கு சென்றார். அப்போது கடையில் வேலை ஆட்கள் யாரும் இல்லை. குடோனில் எடுத்த பொருளை வாடிக்கையாளரிடம் கொடுத்துவிட்டு பணப்பெட்டியை பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை காணவில்லை.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் பீர்முகமது குடோனுக்கு சென்ற நேரத்தில் அங்கு வந்த மூதாட்டி ஒருவர் கடையில் யாரும் இல்லாததை அறிந்து முன்பக்க மேஜையில் இருந்த பணக்கட்டை குனிந்து எடுத்து அவரது கைபைக்குள் போட்டு செல்வது பதிவாகி இருந்தது. ஆனால் அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
மூதாட்டி யார்?
இதுகுறித்து பீர்முகமது கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மூதாட்டி யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் மூதாட்டி லாவகமாக பணத்தை திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.