பராமரிப்பின்றி காணப்படும் புறக்காவல் நிலையம்


பராமரிப்பின்றி காணப்படும் புறக்காவல் நிலையம்
x
தினத்தந்தி 18 Aug 2023 6:45 PM GMT (Updated: 18 Aug 2023 6:46 PM GMT)

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மேல கோபுர வாசலில் பராமரிப்பின்றி காணப்படும் புறக்காவல் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மேல கோபுர வாசலில் பராமரிப்பின்றி காணப்படும் புறக்காவல் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புறக்காவல் நிலையம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இதனால் இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பு கருதி கோவிலின் மேல கோபுர வாசலில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில் தற்போது இந்த புறக்காவல் நிலையம் செயல்பாடின்றி இருந்து வருவதுடன், அதற்கான அறையும் பயன்பாடின்றி சேதம் அடைந்து வருகிறது. மேலும் இந்த இடத்தின் அருகே மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை வழி சாலை சந்திப்பு பகுதியாக இருப்பதால் எந்த நேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதமடைந்து பராமரிப்பின்றி காணப்படும் புறக்காவல் நிலையத்தை சீரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து போலீசாரை நியமித்தால் பக்தர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பயன் அளிக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story