அனக்காவூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

அனக்காவூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அனக்காவூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கொலை மிரட்டல்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்கொளத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு பொக்லைன் ஆபரேட்டராக நர்மாபள்ளம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என தெரிகிறது. அதன் காரணமாக பெருமாள் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கல்குவாரி லாரியை பெருமாள் மடக்கி சம்பள பாக்கி தரவில்லை என்றால் லாரியை விடமாட்டேன் எனக்கூறி லாரியை மடக்கியதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த கல்குவாரியின் உரிமையாளர் கார்த்திகேயன், பெருமாளுக்கு போன் செய்து லாரியை விடவில்லை என்றால் உன்னை துண்டு, துண்டாக வெட்டி விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெருமாள் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார்.
இதற்கிடையில் கல்குவாரியின் மேலாளரை சிலர் வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது. இதற்கு காரணம் பெருமாள் தான் என பெருநகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் பெருமாளை கைது செய்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
அதைத் தொடர்ந்து பா.ம.க. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் பெருமாளின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அனக்காவூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, கல்குவாரியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர்.
தொடர்ந்து முற்றுகையிட்டவர்களிடம் போலீசார் உரிய விசாரணை செய்த பின் வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து கைலந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.