ஆனந்தவல்லியம்மன் கோவில் ஆடி தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோவில் ஆடிதபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மானாமதுரை
மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோவில் ஆடிதபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆடிதபசு
மானாமதுரையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற சோமநாதசாமி-ஆனந்தவல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிதபசு விழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று காலை சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் காலை 8.20 மணிக்கு கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. அதன் பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். விழாவையொட்டி தினந்தோறும் காலை சப்பரத்திலும், இரவு அன்ன வாகனம், கமல வாகனம், யானை வாகனம், கிளி வாகனம், விருஷப வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிளிக்கிறார்.
பூப்பல்லக்கு
விழாவின் சிகர நிகழ்வாக 29-ந் தேதி மாலை அம்மன் ரதத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் அம்பாள் தபசு மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலையில் விருஷபாருடராக காட்சியளிக்கும் நிகழ்ச்சி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி இரவு சந்தனகாப்பு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, மானாமதுரை சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் (பொறுப்பு) சீனிவாசன், ஸ்தானீகம் தெய்வசிகாமணிபட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.