வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கான்பூர் உயிரியல் பூங்கா இடையே விலங்கு பரிமாற்றம்


வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கான்பூர் உயிரியல் பூங்கா இடையே விலங்கு பரிமாற்றம்
x

கிரிபோன் கழுகுகள் மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.

சென்னை,

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை புறநகர் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இது வன விலங்குகளுக்கான வெற்றிகரமான இனப்பெருக்கத் திட்டத்தைக் கொண்டுள்ளது மற்றும் குறிப்பாக கட்ட உடல் மலைப்பாம்பு, சருகு மான் மற்றும் நெருப்புக்கோழிகளை இனப்பெருக்கம் செய்வதில் வெற்றிகரமாக செயல்படுகின்றது. மேற்கூறிய விலங்குகள் பெரும்பாலும் ஏனைய இந்திய உயிரியல் பூங்காக்களுடன் விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பரிமாற்றம் செய்கின்றது.

இந்திய மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஆகஸ்ட் 2023 இல் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கும் கான்பூர் உயிரியல் பூங்காவிற்கும் இடையே பூங்கா விலங்குகளை பரிமாறிக்கொள்ள முன்மொழியப்பட்டது.

முன்மொழிவின்படி, 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் 4 இனங்கள் கான்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்து நேற்று கொண்டு வரப்பட்டது. கான்பூரிலிருந்து சென்னைக்கு விலங்குகள் பரிமாற்றம் பயணத்தில் கான்பூர் உயிரியல் பூங்கா பணியாளர்கள், வனச்சரக அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர் மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால்நடை உதவி மருத்துவர் ஆகியோர் உடன் வந்தனர்.

கொண்டு வரப்பட்ட விலங்குகளின் உடல்நிலை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால்நடை உதவி மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு விலங்குகளை தனிமைப்படுத்தப்பட்ட தற்காலிக அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தும் கால அவகாசம் முடிந்ததும் உயிரியல் பூங்காவில் காட்சிப் பகுதிக்கு மாற்றப்படும்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி மலைப்பாம்புகள், 2 ஜோடி சருகு மான்கள், 3 நெருப்புக்கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள் மற்றும் ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகிய விலங்குகள் இன்று (29.01.2024) அன்று அனுப்பப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story