கொட்டும் மழையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி


கொட்டும் மழையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி
x

கொட்டும் மழையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர்.

திருப்பூர்


கொட்டும் மழையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர்.

வன விலங்குகள் கணக்கெடுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகு பூனை, குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகம் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வனச்சரகங்களில் கடந்த 6-ந் தேதி குளிர்கால கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இங்குள்ள 34 சுற்றுகளில் அமைக்கப்பட்ட 53 நேர்கோட்டு பாதையில் வனப்பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ்.கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ெகாட்டும் மழையிலும்

முதல் 3 நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் வீதம் மூன்று நாட்களில் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று சுற்றுபகுதிகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்பட்டது.

5-ம் நாளான நேற்று உடுமலை வனச்சரகம் கோம்பு மேற்கு சுற்று சின்னார் மற்றும் கட்டளை மாரியம்மன் வனப்பகுதியில் நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் கலந்து கொண்டு கொட்டும் மழையிலும் வனப்பணியாளர்களுடன் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டார். அப்போது தாவர உண்ணிகள் நேரடி கணக்கெடுப்பு மற்றும் தரைபரப்பு பிளாட்பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் காணப்பட்ட சிறுத்தையின் எச்சம் யானைகளின் நடமாட்டம் கணக்கிடப்பட்டது. கணக்கெடுப்பு பணி நாளையுடன் முடிவடைய உள்ளது. அதன் பின்பு நாளை மறுநாள் கணக்கீடு செய்யப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்தப் பணியில் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story