கண்டமங்கலத்தில் அண்ணா சிலை அவமதிப்பு


கண்டமங்கலத்தில் அண்ணா சிலை அவமதிப்பு
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 26 Sep 2022 6:47 PM GMT)

கண்டமங்கலத்தில் அண்ணா சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

விழுப்புரம்

கண்டமங்கலம்

செருப்பு மாலை

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் புதுச்சேரி மெயின்ரோட்டில் அண்ணாவின் முழு உருவ சிலை உள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது இந்த சிலை நிறுவப்பட்டது.

இந்தநிலையில் அண்ணா சிலைக்கு நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்து, முகத்தை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா படத்தை கரும்புள்ளி குத்தி அண்ணா சிலையில் தொங்கவிட்டதுடன், சிலையின் முகத்தை தி.மு.க. கொடியால் மூடி வைத்துள்ளனர்.இதைப்பார்த்த தி.மு.க.வினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. கண்டமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.எஸ்.வாசன் மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள், சிலையின் மீது போடப்பட்டு இருந்த செருப்பு மாலையை அகற்றி, சுத்தம் செய்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிலையை அவமரியாதை செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சிலையை அவமதிப்பு செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி ஒன்றியக்குழு தலைவர் ஆர்.எஸ்.வாசன் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.அண்ணா சிலை அவமதிப்பு சம்பவம் கண்டமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story