தூத்துக்குடிமாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:46 PM GMT)

தூத்துக்குடிமாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.கவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தி.மு.க. ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் தலைமையில் தி.மு.க.வினர் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மகாலட்சுமி சந்திரன் இனிப்புகளை வழங்கினார். மொழிப்போர் தியாகி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த அண்ணா படத்திற்கு தியாகி முத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி மெயின் ரோடு தமிழரசன் படிப்பகம் முன்பு நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான கா.கருணாநிதி தலைமையில் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமர், நகர அவை தலைவர் முனியசாமி, இளைஞரணி நகர செயலாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

கோவில்பட்டியிலுள்ள அண்ணா சிலைக்கு சசிகலா பேரவை தென் மண்டல அமைப்பாளர் கே.மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உடன்குடி

உடன்குடி மெயின் பஜார் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதியில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு பதநீர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய முன்னாள் செயலாளர் முருங்கை மகாராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் உரக்கடை குணசேகரன், உடன்குடி யூனியன் முன்னாள் துணைத்தலைவர் கல்லாமொழி ராஜதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம்

குலசேகரன்பட்டினத்தில் உள்ள அண்ணா சிலைக்கு உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் க.இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் அ.அலாவுதீன், நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு

கயத்தாறு தி.மு.க. ஒன்றிய அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு புதிய பஸ்நிலையத்தில் உள்ள தி.மு.க. பேரூர் அலுவலகத்தில் பேரூர் செயலாளர் சுரேஷ் கண்ணன் தலைமையில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


Next Story