முத்துமாரியம்மன் கோவிலில் ஆனித்திருவிழா


முத்துமாரியம்மன் கோவிலில் ஆனித்திருவிழா
x
தினத்தந்தி 20 Jun 2023 7:11 PM GMT (Updated: 21 Jun 2023 12:26 PM GMT)

முத்துமாரியம்மன் கோவிலில் ஆனித்திருவிழா நடைபெற்றது.

திருச்சி

மணிகண்டம் அருகே மேலப்பாகனூர் கிராமத்தில் தானாய் முளைத்த அருங்கரை முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பகவதி அம்மன், காளியம்மன், திருப்பதி கருப்பு, அய்யனார், சின்னமுத்து ஆகிய கோவில்கள் தனித்தனியே உள்ளது. இந்த கோவில்களின் ஆனித்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் முத்து மாரியம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்களின் மூலவர் தேரில் எழுந்தருள செய்து தேர் வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊரணி கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திரளான பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இரவில் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை 10 மணியளவில் அய்யனாருக்கு சிறப்பு பூஜையும், அதனைத் தொடர்ந்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (புதன்கிழமை) கழுவேற்றம் மற்றும் படுகளம் நிகழ்ச்சியும் நாளை (வியாழக்கிழமை) சுற்று கோவில் பூஜையும், அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேலப்பாகனூர் கிராம ஊர் பட்டையதாரர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story