சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல் கிளீனர் பலி


சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல் கிளீனர் பலி
x

புவனகிரி அருகே விபத்து சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல் கிளீனர் பலி

கடலூர்

புவனகிரி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ஜோசப் என்கிற சுகேந்திரன்(வயது 20). லாரி கிளீனரான இவர் நேற்று அதிகாலை தரங்கம்பாடியில் இருந்து லாரியில் மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். லாரியை அதே ஊரை சேர்ந்த எழிலரசன்(29) என்பவர் ஓட்டினார்.

பின்னர் கேரளாவில் மீன்களை இறக்கிவிட்டு அங்கிருந்து லாரியில் கடலூர் மாவட்டம் வழியாக மயிலாடுதுறை நோக்கி வந்துகொண்டிருந்தார். புவனகிரியை அடுத்த வண்டுராயன்பட்டு மெயின் ரோடு அருகில் வந்தபோது திடீரென கட்டு்ப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியில் இடது பக்கம் அமர்ந்திருந்த சுகேந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் எழிலரசன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.

விபத்து பற்றிய தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுகேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த டிரைவர் எழிலரசன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story