வேலூர் ஜெயிலில் இருந்து மேலும் ஒரு கைதி விடுதலை

75-வது சுதந்திர தினத்தையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து மேலும் ஒரு கைதி விடுதலை செய்யப்பட்டார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் மற்றும் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் 113-வது பிறந்தநாளையொட்டி நீண்டகாலமாக ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் 47 கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாவதற்கு தகுதியானவர்கள் ஆவர். அவர்களில் பல்வேறு கட்டங்களாக இதுவரை 35 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தர்மபுரியை சேர்ந்த தண்டனை கைதி வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அவரின் முன்விடுதலைக்கான ஆணையை வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் வழங்கினார்.
தொடர்ந்து அவருக்கு தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 21 வகையான மளிகை பொருட்களை சங்க துணைத்தலைவர் வக்கீல் விஜயராகவன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பொருளாளர் சீனிவாசன், மருத்துவ அலுவலர் பிரகாஷ் அய்யப்பன், ஜெயில் நலஅலுவலர் மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.