ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
x

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

ஆதிதிராவிடர் நல விடுதி

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கான 16 ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதிகள், 9 பள்ளி மாணவியர் விடுதிகள். ஒரு கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர், மாணவியர்களும், கல்லூரி விடுதியில் பட்ட படிப்பு பயிலும் மாணவர்கள் சேருவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். தகுதி மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:- ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இணைய வழியில் https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஏற்கனவே விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் புதுப்பித்தல் விண்ணப்பத்தினை இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

நேரிலும் விண்ணப்பிக்கலாம்

இணைய வழியில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அவ்வாறு நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்களை சிறப்பினமாக கருதி, அவ்விடுதியில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில், அவர்களையும் விடுதியில் தங்கி கல்வி பயில இருக்கும் பட்சத்தில், தேர்வு குழுவின் ஒப்புதல் பெற்று அனுமதிக்கப்படும். 4-ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் (85%), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணாக்கர் (10%), பிற வகுப்பினர் (5%) என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படும்.

இந்த மாதம் இறுதிவரை...

பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவியருக்கும். பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பள்ளி விடுதியின் சேர்க்கை மற்றும் விண்ணப்ப பதிவு நாளை (புதன்கிழமை) தொடங்கி இந்த மாத இறுதி வரை நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story