புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்


புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
x

புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

உதவித்தொகை

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 5.9.2022 அன்று அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் இளங்கலை பட்டம், பட்டய படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. மாநில அளவில் இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள்.

தற்போது புதுமைப்பெண் திட்டத்திற்கான வலைதளத்தில் (https://www.pudhumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இந்த வலைத்தளத்தில் தகுதியுடைய மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக 1.11.2022 முதல் 11.11.2022 வரை பதிவு செய்யலாம்.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் 11.11.2022 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண் இ.எம்.ஐ.எஸ். எண் மற்றும் மாற்றுச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

சந்தேகங்கள் இருப்பின்

தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதல்கட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9150056801, 9150056805, 9150056809, மற்றும் 9150056810 முதலிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேல் படிப்பு / தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையை சரியாக தெரிந்துகொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்கவும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story