தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு முன்மாதிரியான பங்களிப்பு அளித்து தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 தனி நபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருதும் தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.

அந்த வகையில் கீழ்கண்ட தலைப்புகளில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுரிகள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு 2022-2023 ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி 2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு 4.பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள் 5. நிலைத்தகு வளர்ச்சி 6. திடக்கழிவு மேலாண்மை 7. நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு 8.காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை 9.காற்று மாசு குறைத்தல் 10. பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை 11.சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு 12.கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை 13. இதர சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்கள் போன்றவை.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யும்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்திலிருந்து (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், காஞ்சீபுரம் என்ற முகவரியில் அணுகலாம்.

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் மாதம் 15-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story