மாவட்ட, தொகுதி அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்


மாவட்ட, தொகுதி அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
x

மாவட்ட, தொகுதி அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

விடியல் திட்டம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு சிறப்பு சுய உதவி குழுவை உருவாக்கும் புதிய திட்டமான விடியல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக மேம்படுத்த சிறப்பு சுய உதவி குழுக்களை உருவாக்கி அவர்களின் வாழ்வாதார மேம்படுத்த மாவட்ட அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான தகுதிகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. அடிதட்டு மட்டத்திலுள்ள சமூகத்திற்கு குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்ற பட்டதாரியாக அல்லது எம்.எஸ்.டபுல்யு முடித்தவராக இருக்க வேண்டும்.

டிரைவர் உரிமம்

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் சமூகம் தொடர்பான நல்ல தகவல் தொடர்பு மற்றும் விளக்ககாட்சி திறன் பெற்றவராக இருக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனத்துடன் முறையாக டிரைவர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும்.

தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான தகுதிகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி 8 முதல் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது நலிவுற்ற குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், விண்ணப்ப படிவம் அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் செங்கல்பட்டு மகளிர் திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story