முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் போட்டிகளை நடத்தியவர்கள், நன்கொடையாளர்கள், முதல்-அமைச்சர் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும் தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள், 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுனர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 இட்சம் வீதம் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் போன்றவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வழங்கி ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கி வருகிறது.

விருது ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களை சமர்பித்தல் வேண்டும். இது தவிர விளையாட்டு் போட்டிகளை நடத்தும் நடத்துநர்கள், நிர்வாகிகள், ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்), ஆட்ட நடுவர்கள் ஆகியோர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதுக்கு ரூ.10,000-க்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய 2 வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

இத்திட்டத்தின்படி, 2021 - 2022 -ம் ஆண்டுக்கான (காலம் 1.4.2018 முதல் 31.3.2021 வரை) முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர், விளையாட்டு போட்டிகளை நடத்தும் நடத்துநர்கள், நிர்வாகிகள், ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆட்ட நடுவர்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டுக்காக 2 முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர். இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரெயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை மற்றும் இதர துறைகளில் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். 2-வது முறையாக ஒரு நபருக்கு இந்த விருது வழங்கப்பட மாட்டாது. ஒருவர் காலமாகும் பட்சத்திலும், இந்த விருது வழங்கப்படும் விருதுக்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இந்த விருதுக்காக கருத்தில் கொள்ளப்படும். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும். உரிய விண்ணப்பித்தல் வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு கழகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், முதன்மை உடற்கல்வி ஆய்வர் (ஆடவர் / மகளிர்) மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர்கள், நிர்வாகிகள், ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்கள்), ஆட்ட நடுவர்கள் ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் முதன்மை செயலர், உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை 600 003) என்ற முகவரிக்கு இந்த மாதம் 10-ந்தேதிக்குள் வி்ண்ணப்பிக்க வேண்டும்.

காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story