கல்குவாரி குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்; 25-ந் தேதி கடைசி நாள்


கல்குவாரி குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்; 25-ந் தேதி கடைசி நாள்
x

ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு வட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள கல்குவாரிகளுக்கு குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு வட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள கல்குவாரிகளுக்கு குத்தகை உரிமம் பெற பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெண்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களால் அமைக்கப்பட்ட சங்கம் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

இதற்குரிய விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் படிவங்கள் அடங்கிய அறிவிக்கை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் மற்றும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சிஅலுவலர்களது அலுவலகங்களில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஆர்.கே.பேட்டை வட்டம், பத்மாபுரம் கிராமத்தில் புல எண்:159-ல் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 1.00 ஹெக்டேர் பரப்பு குத்தகைக்கு வழங்கப்படுகிறது. இதைபோல பாலாபுரம் கிராமத்தில் புல எண்:143-ல் உள்ள 1.00 ஹெக்டேர் பரப்புக்கு குத்தகை வழங்கப்படுகிறது. பள்ளிப்பட்டு வட்டம் வெளியகரம் கிராமத்தில் புல எண்:140-ல் அமைந்துள்ள 1.20 ஹெக்டேர் நிலம் குத்தகைக்கு விடப்படுகிறது. மேற்கண்ட இடங்களின் குத்தகை உரிமை காலம் 10 மாதங்கள் ஆகும்.

பள்ளிப்பட்டு வட்டம் வெளியகரம் கிராமத்தில் புல எண்:140-ல் (பகுதி 2) 1.40 ஹெக்டேர் இடம் குத்தகைக்கு விடப்படுகிறது. இதைபோல கரிம்பேடு கிராமம் புல எண்:98/1 (பகுதி 1)-ல் 2.24 ஹெக்டேர் அரசு நிலம் குத்தகைக்கு விடப்படுகிறது. கரிம்பேடு கிராமத்தில் புல எண் 98/1 (பகுதி 2)-ல் 2.24 ஹெக்டேர் அரசு நிலம் குத்தகைக்கு விடப்படுகிறது. இவற்றின் குத்தகை உரிமை காலம் 5 மாதம் ஆகும். மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப மனுக்களை 25-ந் தேதிக்குள், துணை இயக்குனர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை 2-ம் தளம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story