பசுமை தொழில் முனைவு திட்டத்தில் ரூ.4 லட்சம் பெற விண்ணப்பிக்கலாம்


பசுமை தொழில் முனைவு திட்டத்தில் ரூ.4 லட்சம் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் பசுமை தொழில் திட்டத்தில் ரூ.4 லட்சம் நிதி பெற விண்ணப்பிக்க வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) கடைசி நாள்.

மயிலாடுதுறை

பசுமை தொழில் திட்டம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக மேம்படுத்திட பசுமை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் "பசுமை தொழில் முனைவு திட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்கள் மட்டுமே தேர்வு செய்யப்படும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை நிறுவனங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் தொழில் குறித்து தொழில் முனைவோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பிக்கும் நிறுவனம் தொடங்கி ஓராண்டிற்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும். நிறுவனம் கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அங்கீகாரம் மற்றும் ஜி.எஸ்.டி. பதிவு பெற்றிருக்க வேண்டும்.

ரூ.4 லட்சம்...

விண்ணப்பிக்கும் நிறுவனமானது குறைந்தபட்சம் 3 வேலையாட்களை கொண்டு செயல்படக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும். தொழில் நிறுவனம் இணைய தளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்தது ரூ.4 லட்சமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளை, பச்சை மற்றும் ஆரஞ்சு தொழில் நிறுவனங்களால் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

விருப்பமுள்ளோர் வரும் 7-ந்(சனிக்கிழமை)தேதிக்குள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பிக்கலாம். மேற்கண்டவாறு தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு தலா ரூ.4 லட்சம் மூன்று கட்டங்களாக தொழில் வளர்ச்சி நிதியாக வழங்கப்படும். மேலும், கண்காணிப்பு மற்றும் பசுமைத்தணிக்கை மூலம் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story