தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்


தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:46 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர்

தற்காலிக பட்டாசு கடை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர், அரசு விதிகளை கடைபிடித்து, இணைய தளம் அல்லது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வோர் வெடிமருந்து சட்டம், 1884 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008-ல் உள்ள விதி 84-யை முறையாக கடைபிடித்து பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து, ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டும் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அதாவது, கடையின் வரைபடம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின், அதற்கான அசல் பத்திரம், உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில், இடத்தின் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமக்கட்டணம் ரூ.500, அரசுக் கணக்கில் செலுத்தியதற்கான அசல் செலான், வீட்டு முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள வண்ண புகைப்படம்-2 ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம்

தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் விண்ணப்பதாரர்கள், இசேவை மையத்தின் மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரருக்கு தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும்.

மேலும், தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் கோரும் விண்ணப்பங்களை 24.10.2023 -ந்தேதி மாலை 5.45 மணி வரை இ-சேவை மையத்தின் மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 24.10.2023 -ந் தேதிக்கு பின்னர் விண்ணப்பிக்கும், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரருக்கு, தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story