'தமிழ்ச்செம்மல் விருது' பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தமிழ் ஆர்வலர்கள் ‘தமிழ்ச்செம்மல் விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்கள் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி, பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தேர்வுசெய்து "தமிழ்ச்செம்மல் விருது" வழங்கப்படுகிறது.

இந்த விருது பெறுபவர்களுக்குத் தகுதியுரை, பரிசுத்தொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் தமிழ்ச்செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பெறுகின்றன.

விண்ணப்பங்களைத் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிப்பவர்கள் பதிவிறக்கம் செய்த படிவத்தினை பூர்த்தி செய்து அதனுடன் தங்களை பற்றிய குறிப்பு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2, தமிழ் வளர்ச்சிக்காக ஆற்றிய செயல்கள் குறித்து நூல்கள், கட்டுரைகள் வெளியிட்டு இருப்பின் அதன் தொடர்பான விவரங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந்தால் அவை குறித்த விவரங்கள், மாவட்டத்தில் செயல்படும் தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள் இரண்டு பேரின் பரிந்துரைக் கடிதங்கள், ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கான சான்றுகள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வருகிற அக்டோபர் 10-ந் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக கிடைக்குமாறு அனுப்பவேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story