மானிய விலையில் விவசாய நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்


மானிய விலையில் விவசாய நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்
x

மானிய விலையில் விவசாய நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் 2022-23-ம் ஆண்டு மானிய கோரிகையின்போது, 200 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின், சமூக பொருளாதார நிலை மேன்மையடைய சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த 18 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். நிலம் வாங்க உத்தேசிக்கவுள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம் மற்றும் நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் ஒரு பயனாளிக்கு மானியமாக வழங்கப்படும்.

நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்தரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் தாட்கோவில் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்களான நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்துதல் மற்றும் துரித மின் இணைப்பு திட்டம் ஆகிய விவசாயம் சார்ந்த திட்டங்களில் மானியம் பெற்று பயனடைந்தவர்களும், தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையால் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் "ஒரு துளி அதிகப்பயிர்" திட்டத்திலும் பயனடையலாம். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தோட்டக்கலை துறையினை அணுகலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story