50 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்


50 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:47 PM GMT)

வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் 50 சதவீத மானிய உதவியுடன் வேளாண் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

தொழில் முனைவோராக்கும் திட்டம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- வேளாண்மையில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் கடந்த 2021-2022-ம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 86 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் படித்த பட்டதாரிகளை தொழில் முனைவோர்களாக்கி விவசாயிகளுக்கு உதவும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மானியம்

2023-2024-ம் நிதி ஆண்டில் வேளாண்மை தோட்டக்கலை வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வங்கிக்கடன் உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க பட்டதாரி ஒருவருக்கு விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை, வங்கிக்கடன் ஒப்புதல் பெற்ற பிறகு பின்னேற்ப்பு மானியமாக வழங்கப்படுகிறது.

இதில் கிராமப்புற பட்டதாரிகளை தொழில் முனைவோர்களாக்கி காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், வேளாண் கருவிகளை வாடகைக்கு விடும் மையம், இயற்கை, உயிர் பூச்சி, பூஞ்சான கொல்லிகள் தயாரித்தல், உரம், பூச்சி கொல்லிகள் வினியோகம், மண், தண்ணீர் பரிசோதனை மையம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு தோட்டக்கலை வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.

இணையதளத்தில்

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகள் 21-40 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைகளில் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளி மட்டுமே பயன்பெற முடியும். 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பட்டப்படிப்பு சான்று, ஆதார் நகல், ரேஷன் அட்டை நகல், வங்கி பாஸ்புக் முதல் பக்க நகல், வங்கியில் கடன் பெற்ற பயனாளிகள் (கடன் பெற்ற சான்று மற்றும் விபரம்) விரிவான திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஸ்டாமின் குடுமியான்மலை மூலம் 2 வார இணையதள பயிற்சி அளிக்கப்படும். வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி குறித்து கூடுதல் விவரங்களை https://agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் குறித்து கூடுதல் விவரங்களை https://agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story