சிக்ரி புதிய டைரக்டா் நியமனம்

சிக்ரி புதிய டைரக்டா் நியமனம் செய்யப்பட்டார்
காரைக்குடி
காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் (சிக்ரி) புதிய இயக்குனராக ரமேஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வேதியியல் துறையில் முதுகலை அறிவியல் பட்டம், தின்மநிலை மற்றும் கட்டமைப்பு ரசாயனவியல் சார்ந்த ஆராய்ச்சிக்காக இந்திய அறிவியல் ஆய்வக நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். லித்தியம் அயன் மின்கலன்கள் மற்றும் தின்மநிலை மின்கலங்கள் போன்ற எதிர்கால சாதனங்கள் குறித்த துறைகளில் திறன் பெற்றவர். அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் லாஸ்அல்மோஸ் தேசிய ஆய்வகம் ஆகியவற்றில் முது முனைவர் ஆராய்ச்சியாளராக பணியாற்றியுள்ளார். காரைக்குடி சிக்ரியில் 2008-ம் ஆண்டு விஞ்ஞானியாக தனது பணியை தொடங்கி மூத்த முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றினார்.
இந்திய அறிவியல் ஆய்வக நிறுவனத்தின் சிறந்த முனைவர் ஆய்வு அறிக்கைக்கான கேபி ஆபிரகாம் பதக்கத்தை பெற்றுள்ளார். தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி இதழ்களில் 91 ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். கார்னெட் என்ற திட மின்பகுபொருள் கொண்டு உருவாக்கப்பட்ட தின்ம நிலை லித்தியம் அயன் மின்கல தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






