ஆவடி மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமனம் -தமிழக அரசு உத்தரவு


ஆவடி மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமனம் -தமிழக அரசு உத்தரவு
x

ஆவடி, கோவை, நெல்லை, ஈரோடு, மதுரை மாநகராட்சிகளுக்கு புதிய கமிஷனர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்பகராஜ், உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை கமிஷனர் ஷேக் அப்துல் ரகுமான், ஆவடி மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மதுரை, ஈரோடு

மதுரை மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரியாக இருந்த மதுபாலன், மதுரை மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்.

நெல்லை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி தாகரே சுபம் தயேந்திரராவ், நெல்லை மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

ஓசூர் சப்-கலெக்டர்

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, திருவாரூர் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டார். ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா, கடலூர் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story