இணைப்பு சாலை அமைக்கும் பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு


இணைப்பு சாலை அமைக்கும் பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு
x
தினத்தந்தி 2 Oct 2023 8:30 PM GMT (Updated: 2 Oct 2023 8:30 PM GMT)

ஆச்சிப்பட்டியில் இணைப்பு சாலை அமைக்கும் பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என்று கிராம சபை கூட்டத்துக்கு வந்த கலெக்டர் உறுதி அளித்தார்.

கோயம்புத்தூர்

ஆச்சிப்பட்டியில் இணைப்பு சாலை அமைக்கும் பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என்று கிராம சபை கூட்டத்துக்கு வந்த கலெக்டர் உறுதி அளித்தார்.

கிராம சபை கூட்டம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஆச்சிப்பட்டி ஊராட்சி சேரன் நகரில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கலந்துகொண்டு பேசினார். அவரிடம், குடிநீர் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்களை வழங்கினார்கள். பின்னர் சிறப்பாக தூய்மை பணியாற்றியவர்களுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி, கேடயங்கள் வழங்கினார்.

14 தீர்மானங்கள்

இதில் சப்-கலெக்டர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, தாசில்தார் ஜெயசித்ரா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பஷீர் அகமது, வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டத்துக்கு வந்த பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இணைப்பு சாலை

இதையடுத்து கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆச்சிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை அமைப்பதால் பல்வேறு பாதிப்புகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

முதலில் திட்ட அறிக்கையில் 5 மீட்டராக இருந்த இணைப்பு சாலை, தற்போது 7 மீட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளதால் கூடுதலாக நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும்.

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நேற்று(நேற்று முன்தினம்) 107 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதேபோன்று தொடர்ந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story