சேவை வரியை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மேல்முறையீடு செய்யலாம் -ஐகோர்ட்டு


சேவை வரியை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மேல்முறையீடு செய்யலாம் -ஐகோர்ட்டு
x

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதித்ததை எதிர்த்து இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ்குமார் தொடர்ந்த வழக்கு களை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு, ஏ.ஆர்.ரகுமானைஜி.எஸ்.டி. கவுன்சிலில் மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை படைப்புகளுக்கு 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. ஆணையர் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கடந்த 2020-ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், "இசை படைப்புகளின் காப்புரிமை, சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கப்படுகிறது. எனவே, இந்த படைப்புகளின் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள்தான். அதனால், என்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம். என்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

களங்கம் இல்லை

இந்த வழக்கில் ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. இந்த நோட்டீசை எதிர்த்து ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மேல்முறையீடு செய்து அவர் நிவாரணம் பெறலாம். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜி.எஸ்.டி. ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தள்ளுபடி

இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அதனால், தள்ளுபடி செய்கிறேன். மேலும், ஜி.எஸ்.டி. ஆணையரின் உத்தரவை எதிர்த்து அவர் 4 வாரத்துக்குள் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மேல்முறையீடு செய்யலாம்.

அதேபோல, ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்கிறேன். ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு 4 வாரங்களில் ஜி.வி.பிரகாஷ்குமார் விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.


Next Story