விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? குறைந்து வருகிறதா?


விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? குறைந்து வருகிறதா? என விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

ஒன்றைச் சொல்லிவிட்டு, ''விளையாட்டுக்குச் சொன்னேன். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! '' என்று சிலர் சொல்வதை நாம் கேள்விப்பட்டு இருக்கலாம்.

இங்கே விளையாட்டு என்ற சொல் 'பொருட்படுத்தத் தேவையில்லை' என்ற பொருளில் வருகிறது. இன்றைய இளைஞர்கள் பலரும் விளையாட்டை அவ்வாறே பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு செயலாகவே ஒதுக்கி விடுகிறார்கள்.

காரணம், அவர்களின் விளையாட்டு நேரங்களை நவீன தொழில்நுட்பங்கள் பறித்துக்கொள்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

சாதிக்க முடியும்

கம்ப்யூட்டர், செல்போன் என்று எந்திரங்களில் மூழ்கி கிடக்கும் அவர்கள், உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் சோர்வடைந்து வருகிறார்கள்.

சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். இளைஞர்கள் அதை உணர வேண்டும். மாணவர்கள் விளையாட்டை வெறும் விளையாட்டாக கருதிவிடக் கூடாது. உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் சேர்ப்பது விளையாட்டு. எனவே விளையாட்டை ஒரு பாடமாக நினைத்து படித்துக்கொள்ள வேண்டும்; பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் எந்த அளவில் விளையாட்டுகளில் ஆர்வம் காண்பிக்கின்றனர் என்பது குறித்து சர்வதேச விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்களைக் காண்போம்.

கைப்பந்து வீரர் பி.ஜெகதீசன்

இதுகுறித்து சர்வதேச கைப்பந்து வீரரும், நெல்லை நண்பர்கள் கைப்பந்து கழகம் மற்றும் டாக்டர் சிவந்தி கைப்பந்து கழகம் செயலாளருமான பி.ஜெகதீசன் கூறும் போது, 'சென்னையில் கடந்த 1986-ம் ஆண்டு டாக்டர் சிவந்தி ஆதித்தன் பெயரில், அவரின் தொடர் உதவியுடன் ''டாக்டர் சிவந்தி கிளப்'' என்ற பெண்களுக்கான கைப்பந்து அணி தொடங்கப்பட்டு அதன் மூலம் பல பெண்கள் இலவச கைப்பந்து பயிற்சி பெற்று பல மாநில, தேசிய, மற்றும் சர்வதேச அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு உள்ளனர். இவர்கள் பல அரசு துறைகளில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். 2013-ம் ஆண்டு பள்ளி அளவில் உள்ள வசதியற்ற பெண் பிள்ளைகளுக்கு பயிற்சி அளித்து புதிய பல வீராங்கனைகளை உருவாக்கி வருகிறோம். இந்த விளையாட்டு அரங்கில் கைப்பந்து, கபடி மட்டுமின்றி, ஹாக்கி, கூடைப்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற்று வந்தனர். 2000-ம் ஆண்டிற்கு பிறகு மாணவர்களின் செல்போன் மோகம், பள்ளிகளின் தேர்ச்சி விகித எதிர்பார்ப்பாக பெரும்பாலான பள்ளிகளின் விளையாட்டு வகுப்புகளுக்கு அனுமதியின்மை, பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமை, பெற்றோர்களிடம் விளையாட்டின் மீதான ஆர்வமின்மை போன்ற பல காரணங்களால் இருக்கின்ற விளையாட்டு அரங்கங்களும் பயிற்சி பெற மாணவர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு போட்டிகள் நடத்துவதற்கு பல நிறுவனங்கள் உதவி செய்வதை நிறுத்தி விட்டன. இதனால் போட்டிகள் நடத்த முடிவதில்லை. நாம் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியாமல் போகிறது'

ஷைனி வில்சன்

கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை 4 ஒலிம்பிக் போட்டிகள் உள்பட 75 சர்வதேச தடகள போட்டிகளில் கலந்து கொண்டு 80-க்கும் அதிகமான விருதுகளை பெற்ற ஒரே பெண் என்ற பெருமையை கொண்டவரும், சென்னையில் உள்ள இந்திய உணவு கழகத்தின் தென்மண்டல பொதுமேலாளருமான ஷைனி வில்சன் கூறும் போது, 'மத்திய, மாநில அரசுகள் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த பள்ளி, மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஊக்குவித்து வருகிறது. விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வம் காண்பித்தாலும் அது போதுமானதாக இல்லை. இன்னும் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காண்பிக்க வேண்டும். ஒலிம்பிக் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறுப்பேற்ற பிறகு அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் போட்டிகளில் பங்கேற்றதுடன், சர்வதேச அளவிலும் விருதுகளையும் குவித்தனர். தற்போது விளையாட்டு வீரர்களுக்கு அரசு செய்து தரும் வசதிகளை பயன்படுத்தி அதிகம் பேர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சர்வதேச அளவில் சாதனை படைக்க முன்வர வேண்டும். சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள நான் செல்லும்போது இப்போது இருப்பது போன்ற வசதிகள் எதுவும் பெரிதாக கிடையாது. ஆனால் தற்போது அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு அதிக வசதிகள் செய்து தருவதால் அதனை பயன்படுத்தி சர்வதேச அளவில் இந்தியாவிற்கு விளையாட்டு துறையில் மேலும் நல்ல பெயரை பெற்றுதர இன்னும் அதிகமான இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும்'.

கபடி பயிற்சியாளர்

இந்திய விளையாட்டு ஆணையத்தின் சீனியர் கபடி பயிற்சியாளர் (ஓய்வு) என்.ஜெயராஜ் கூறும் போது, 'கிரிக்கெட் விளையாட்டில்தான் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ளது. தற்போது இளைஞர்களுக்கு படிப்படியாக அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஊடகங்களின் பங்கும் அதிகம் உள்ளது. அதேபோல் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுத்தரப்படுகிறது. அதேபோல் கபடி விளையாட்டுகளிலும் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதில் இளைஞர்கள் அதிகம் பேர் வந்து கலந்து கொள்கின்றனர். பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அதிகம் இருப்பதால் இளைஞர்கள் பள்ளிகளில் அதிகளவில் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். மாறாக வீடுகள் அருகில் பொது இடங்களில் விளையாட்டு மைதானம் இல்லாததால் மாலை நேரங்களில் இளைஞர்கள் பெரிய அளவில் விளையாட்டுகளில் கலந்து கொள்வதில்லை. எனவே பொது இடங்களிலும் விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டும்'.

ஆர்வம் இல்லை

வெம்பக்கோட்டையை சேர்ந்த கோவிந்தன்:-

இளைஞர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகளுக்கான தனித்தனி திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காகவும், ஊக்குவிக்கவும் கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். விழாகாலங்களில் கபடி போட்டி, ஓட்டப்பந்தயம், கோகோ, கயிறு இழுத்தல், இறகு பந்து போட்டி, சைக்கிள் போட்டி, உறி அடித்தல், சிலம்பம் சுற்றுதல் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் காலை முதல் மாலை வரை கிராமங்களில் சிறப்பாக நடைபெறும்.

ஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வம் குறைந்து விட்டது. நிறைய மைதானத்தில் வீரர்கள் இல்லாமல் வெறும் மைதானமாக உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் எண்ணற்ற விளையாட்டு போட்டிகள் நடத்தினாலும் ஒரு சிலர் அதில் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. எனவே மாணவர்களை ஊக்கப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மைதானம்

கல்லமநாயக்கர்பட்டி கல்லூரி பேராசிரியை ஐஸ்வர்யா:-

விளையாட்டின் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கக்தான் செய்கிறது. ஆனால் அதற்கு உண்டான வசதி இல்லை. பள்ளி, கல்லூரிகளில் மைதான வசதி இருப்பதால் மாணவர்கள் அதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆனால் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் மைதான வசதி இல்லாததால் விளையாட்டின் மீதான ஆர்வம் குறைந்து விட்டது. மாணவர்களுக்கு தேவையான மைதானத்தையும், விளையாட்டு உபகரணங்களையும் கூடுதலாக வழங்கினால் இளைஞர்களுக்கு இன்னும் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

இளைஞர்களின் மோகம்

அருப்புக்கோட்டை பேராசிரியை செல்லத்தாய்:-

பழங்காலத்தில் இளைஞர்கள் கபடி, கோகோ, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் நாட்டம் செலுத்தி வந்தனர். காலப்போக்கில் இளைஞர்களின் மோகம் அனைத்தும் கிரிக்கெட்டை நோக்கி சென்று விட்டது. தற்போது இளைஞர்கள் ஆங்காங்கே உள்ள காலி இடங்களில் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க முடிகிறது. தற்போதைய ஆன்லைன் மோகத்தால் விளையாட்டு ஆர்வம் வெகுவாக குறைந்துவிட்டது. செல்போன்களிலேயே மூழ்கும் இளைஞர்கள் அதிலேயே விளையாட்டுகளுக்கு அடிமையாகி விடுகின்றனர். விளையாட்டு ஆர்வம் என்பது தற்போதைய இளைஞர்களிடையே முற்றிலும் குறைந்து விட்டது. பள்ளியில் படிக்கும் போது தான் ஒரு சில மாணவர்கள் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், ஆக்கி உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடுகின்றனர்.

மற்றபடி இளைஞர்களுக்கு விளையாட்டு ஆர்வம் என்பது இல்லை. ஆர்வத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய தேசிய விளையாட்டு நாள்

இதுகுறித்து விளையாட்டு துறை அதிகாரிகள் கூறும் போது, 'உலகெங்கிலும் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை மேஜர் தியான்சந்த் என்பவரின் ஹாக்கிதான் ஓங்கி ஒலிக்கச் செய்தது. இவர் தனது வாழ்க்கை முழுவதையும் விளையாட்டுக்கே அர்ப்பணம் செய்தார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக இருந்த மேஜர் தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந்தேதியை 'இந்திய தேசிய விளையாட்டு நாள்' என்று கடந்த 2012-ம் ஆண்டு முதன் முதலாக அறிவிக்கப்பட்டது.

நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு நாளில் ஜனாதிபதியால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றன. விளையாட்டில் இளைஞர்கள் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன' இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story