மதுபோதையில் தகராறு: ஆலங்குடி வாலிபரை காரை ஏற்றி கொல்ல முயற்சி


மதுபோதையில் தகராறு: ஆலங்குடி வாலிபரை காரை ஏற்றி கொல்ல முயற்சி
x

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆலங்குடி வாலிபரை காரை ஏற்றி கொல்ல முயன்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

மதுபோதையில் தகராறு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி ஊராட்சி தேனீக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 33). அதே பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (20). இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள வயல் அருகே உள்ள பாலக்கட்டையில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்ய முயற்சி

இந்தநிலையில் நேற்று மாரியப்பன் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் பாலாமணியை ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக மாரியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் வெண்ணாவல்குடிக்கு அவரை அழைத்து சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு மாரியப்பன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற ரமேஷ் மாரியப்பனை கொலை செய்யும் நோக்கத்தில் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ரமேஷை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து, படுகாயம் அடைந்த மாரியப்பனை பொதுமக்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வாலிபரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற ரமேஷை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story