அரியலூர் மாவட்டத்தில் 5,06,071 வாக்காளர்கள்


அரியலூர் மாவட்டத்தில் 5,06,071 வாக்காளர்கள்
x

அரியலூர் மாவட்டத் தில் 5,06,071 வாக்காளர்கள் உள்ளனர்.

அரியலூர்

பட்டியல் வெளியீடு

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 1,26,712 ஆண் வாக்காளர்களும், 1,26,632 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,53,349 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 1,25,898 ஆண் வாக்காளர்களும், 1,26,819 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,52,722 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 5,06,071 வாக்காளர்கள் உள்ளனர். வருகிற 1.1.2023 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2023-ம் ஆண்டில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும் வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் வருகிற 8.12.2022 வரை படிவங்களை பெற்று அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம்.

சிறப்பு முகாம்கள்

மேலும், சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கான விண்ணப்பப் படிவங்களானது (படிவம் 6, 6பி, 7 மற்றும் 8) அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தினங்களில் வாக்காளர்களுக்கு வழங்கிட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம் நாட்களை தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்படுத்திடுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தெரிவித்தார். தொடர்ந்து, வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்காளர் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்) மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story