பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தவர் கைது


பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 13 July 2023 5:29 PM GMT (Updated: 14 July 2023 7:35 AM GMT)

அவினாசியை சேர்ந்த பெண்ணிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக பணம் கிடைக்கும் என்றுகூறி ரூ.11 லட்சத்தை ஏமாற்றியவரை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

ரூ.11 லட்சம் மோசடி

திருப்பூர் மாவட்டத்தில் சமீபகாலமாக ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் வர்த்தகம் செய்வதன் மூலமாக அதிகமாக பணம் கிடைக்கும் என்று நம்ப வைத்து பணத்தை ஏமாற்றும் புதிய வகை சைபர் குற்றம் அரங்கேறி வருகிறது.

அவினாசியை சேர்ந்த பெண் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் 29-ந் தேதி புகார் கொடுத்தார். அதில் தனது செல்போன் எண்ணுக்கு டெலிகிராம் பகுதிக்கு வந்த குறுந்தகவலில் ஆன்லைன் பகுதி நேர வேலை, ஆன்லைன் வர்த்தகம் செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று லிங்க் வந்தது. அந்த லிங்கில் நுழைந்து சிறிய தொகையை நான் செலுத்தினேன். அதற்கு இருமடங்கு பணம் கிடைத்தது. இவ்வாறு தொகையை அதிகமாககட்டத்தொடங்கி அதற்கேற்ப பணம் அதிகமாக வந்தது. அதன்பிறகு நம்பிக்கை ஏற்பட்டு ரூ.11 லட்சத்தை முதலீடு செய்தேன். அதன்பிறகு கமிஷன் தொகை மற்றும் நான் செலுத்திய பணத்தைக்கூட திருப்பிக்கொடுக்கவில்லை. பணத்தை செலுத்தும்போது நம்ப வைப்பதற்காக பணம் இருப்பது போல் நம்ப வைத்து ஏமாற்றி விட்டனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கைது

இதைத்தொடர்ந்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் இதுபோன்ற டெலிகிராம் குரூப்பில் பணம் பெறும் நபர்களின் வங்கி கணக்குகள், செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது பணத்தை முதலீடு செய்பவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் போலியானவர்கள் என்பது தெரியவந்தது.

அந்த பெண் செலுத்திய பணம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 52) என்பவரின் வங்கிக்கணக்குக்கு சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் அவரை கோவை சாய்பாபா காலனியில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கூட்டாளிகள் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story