ஓசூர், சாமல்பட்டியில்ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசார் 276 பேர் கைது


ஓசூர், சாமல்பட்டியில்ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசார் 276 பேர் கைது
x
தினத்தந்தி 15 April 2023 7:00 PM GMT (Updated: 15 April 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர், சாமல்பட்டியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 276 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெயில் மறியல்

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசின் போக்கை கண்டித்தும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று மதியம் ரெயில் மறியல் போராட்டம் நடத்தபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஓசூர் ரெயில் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையத்துக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் வைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் மறியலில் ஈடுபட ரெயில் நிலையம் நோக்கி வந்த மாநில செயலாளர் சிவகுமார், மாநகர தலைவர் தியாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரகுமான், துணைத்தலைவர் பிரவீன்குமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் சீனிவாசன், குமார் உள்ளிட்ட 149 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதேபோல் ஓசூர் ஆர்.சி. தேவாலயம் அருகே தண்டவாளத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றும், தண்டவாளத்தில் தலை வைத்து படுக்க முயன்ற நிர்வாகியை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கைது

இதேபோல் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து மத்தூர் அருகே சாமல்பட்டி ெரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.45 மணி அளவில் கோவையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிைல மறிப்பதற்காக செல்லகுமார் எம்.பி. தலைமையில் காங்கிரசார் வந்தனர்.

இதையடுத்து சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் நுழைய முயன்ற காங்கிரஸ் கட்சியினரை ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்மின் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ெரயில் மறியலில் ஈடுபட முயன்றதாக மாவட்ட தலைவர் நடராஜன், மாநில பொதுச்செயலாளர் இளஞ்செழியன், மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் உமர் பாஷா, மாவட்ட துணை தலைவர்கள் ராமன், ஜெயப்பிரகாஷ், விவேகானந்தன், பொதுக்குழு உறுப்பினர் குமரேசன் உள்பட 127 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கைதானவர்கள் சாமல்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story