காரில் வந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது


காரில் வந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரில் வந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடைபயிற்சி

கோவை பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவுசல்யா (வயது38). இவர்கள் இருவரும் அதிகாலையில் அந்த பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவர் ராஜ்குமார் வேலை காரணமாக உடன் வராததால், கவுசல்யா மட்டும் தனியாக நடைபயிற்சி மேற்கொண்டார். அவர் அங்குள்ள ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

கவுசல்யா நடந்து செல்வதை கண்ட மர்ம நபர்கள் காரில் அவரை பின்தொடர்ந்தனர். பின்னர் ஒருவர் காரின் முன்பக்க கதவை திறந்து கையை வெளியே நீட்டி கவுசல்யா கழுத்தில் கிடந்த தங்க நகையை பறிக்க முயன்றார். உடனே கவுசல்யா இரு கைகளினாலும் நகையை இறுகப்பற்றிப்பிடித்துக்கொண்டார். இதனால் அந்த நபரால் நகையை பறிக்க முடியவில்லை. ஆனால் கவுசல்யா தடுமாறி கீழே விழுந்தார். உடனே காரில் வந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

வீடியோ வைரல்

இந்த நிலையில் காரில் வந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனிடையே கவுசல்யா அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கவுசல்யாவிடம் நகை பறிக்க முயன்ற கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) சண்முகம் கூறியதாவது:-

தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபர்கள் தாங்கள் பயன்படுத்திய காரின் நம்பர் பிளேட்டை கழற்றி வைத்திருந்தனர். இதனால் அந்த காரை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் ஏராளமான கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அவர்கள் வந்த கார் கோவை மாநகரை விட்டு வெளியே செல்லவில்லை என்று உறுதியாக தெரிந்தது. இந்த நிலையில் கோவை விமான நிலையம் அருகே அந்த கார் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அந்த காரை அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசார் மடக்கி, காரில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரை பிடித்தனர்.

2 பேர் கைது

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக்குமார் (25), இவரது நண்பர் டிரைவர் சக்திவேல் (28). இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக கோவை சித்ரா பகுதியில் வசித்து வசித்து வந்துள்ளனர். சக்திவேல் சொந்தமாக கார் வைத்து, வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். அபிஷேக்குமார் கோவையில் ஒரு நிறுவனத்தில் உணவு வினியோகஸ்தராக பணியாற்றி வந்துள்ளார்.இந்த நிலையில் சக்திவேலுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. ஆகவே அவர் தனது நண்பரான அபிஷேக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.அப்போது அபிஷேக்குமார் யாரிடமாவது நகையை பறித்து பணத் தேவையை பூர்த்தி செய்யலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இருவரும் நடந்து செல்லும் பெண்களிடம் நகையை பறிக்க திட்டமிட்டனர். அடையாளம் தெரிந்து விடாமல் இருக்க தங்களது காரின் நம்பர் பிளேட்டை கழட்டி வைத்தனர்.

இந்த நிலையில் அவர்கள் கோவை ஜி.வி. ரெசிடென்சி பகுதிக்கு காரில் வந்த போது, தனியாக நடைபயிற்சியில் ஈடுபட்ட கவுசல்யாவிடம் நகை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக நகையை பறிக்க முடியாமல் போனது தெரியவந்தது. அபிஷேக்குமார் மீது கோவையில் ஏற்கனவே நகைபறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சக்திவேல் மீது வழக்கு ஏதும் இல்லை. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

1 More update

Next Story