போலி ஆவணம் தயாரித்து பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவர் கைது


போலி ஆவணம் தயாரித்து பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவர் கைது
x

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவரை நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

காஞ்சீபுரம் ஹாஸ்பிடல் சாலையை சேர்ந்தவர் மல்லிகா (வயது 50). இவரது கணவர் சந்திரபாபு. இவர்கள் 1997-ம் ஆண்டு ஆவடி அடுத்த வெள்ளானூர் ஆர்ச் அந்தோணி நகரில் 1,200 சதுர அடி நிலத்தை வாங்கினர். மல்லிகாவின் கணவர் சந்திரபாபு இறந்து விட்டார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு மல்லிகா தங்கள் இடத்தை பார்க்க வெள்ளானூர் ஆர்ச் அந்தோணி நகருக்கு வந்தார். அப்போது அந்த இடத்தை வேறு ஒருவர் ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று விசாரித்த போது, சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5-வது பிளாக்கை சேர்ந்த சையத் இப்ராஹிம் (43) என்பவர் பெயரில் இருந்து இடத்தை சென்னையைச் சேர்ந்த டானிபாய் என்பவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு கிரையம் செய்திருப்பது தெரியவந்தது.

போலீசில் புகார்

இதுகுறித்து மல்லிகா ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி, உதவி கமிஷனர் பொன்சங்கர் மேற்பார்வையில் நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் இப்ராஹிமை அழைத்து விசாரணை நடத்தினர்.

மோசடி நபர் கைது

விசாரணையில் சையத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து மல்லிகாவின் கணவர் பெயரில் போலியான இறப்பு சான்றிதழ் மற்றும் அவரது மகள் தேவி பெயரில் பொய்யான வாரிசு சான்றிதழ் பெற்று ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் மூலம் டானிபாய் என்பவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு நிலத்தை கிரையம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் இப்ராஹீமை கைது செய்து சிறையில் அடைத்தனர். நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.87 லட்சம் என்று கூறப்படுகிறது.


Next Story