அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டி


அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டி
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:45 PM GMT)

சங்கராபுரம், சின்னசேலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தண்டபாணி, வெங்கடேசன், வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, தஸ்பிகா, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கமருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சீனுவாசன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் கலந்துகொண்டு கலைத்திருவிழா போட்டியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கலை, இசை கருவி, நடனம், நாடகம், மொழித்திறன் உள்ளிட்ட போட்டிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 21 பள்ளிகளும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 11 பள்ளிகளும், 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 13 பள்ளிகளும் பங்கேற்றன. இதில் வெற்றிபெறுபவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள். நிகழ்ச்சியில் வட்டார கல்வி மேற்பார்வையாளர் கவிதா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாட்சாயணி, செந்தில், வெங்கடேசன், பிரான்சிஸ், மலர்க்கொடி, அல்தாபேகம். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சசிகலா, ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) ஜோதிமணி தொடங்கி வைத்தார். சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். துணை தலைவர் அன்புமணிமாறன், சின்னசேலம் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வராஜ் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் தனபால், கென்னடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன், சின்னசேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் கிராமிய நடனம், குழு நடனம், கவிதை புனைதல், ஓவியம் வரைதல், களிமண் சிற்பம், நாடகம், மெல்லிசை உள்ளிட்ட கிராமிய கலை போட்டிகள் நடந்தது. முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். முடிவில் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.


Next Story