அங்கன்வாடி குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்த கலை நிகழ்ச்சி


அங்கன்வாடி குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்த கலை நிகழ்ச்சி
x

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்திய சுதந்திர அமிர்த பெருவிழாயொட்டி கலை நிகழ்ச்சிகளை அங்கன்வாடி குழந்தைகள் நிகழ்த்தினர்.

நாமக்கல்

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு கலையரங்கில் இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு அமிர்த பெருவிழா நடைபெற்று வருகிறது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று பிற்பகல் ஊட்டச்சத்து குறித்த கலை நிகழ்ச்சிகளை அங்கன்வாடி குழந்தைகள் நிகழ்த்தினர். காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பயன்கள் குறித்தும், ரத்த சோகை நோய் குறித்தும் குழந்தைகள் பேசியும் நடித்தும் காட்டினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா கலை நிகழ்ச்சியை நடத்திய குழந்தைகளுக்கும், வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார். முன்னதாக புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார் வரவேற்று பேசினார். முடிவில் தர்மபுரி மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பர உதவியாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

முன்னதாக நேற்று காலையில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் ஜெயந்தினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொழுநோய் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story