ஆறுமுகசாமி ஆணையம் அரசியல் உள்நோக்கம் கொண்டது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்


ஆறுமுகசாமி ஆணையம் அரசியல் உள்நோக்கம் கொண்டது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
x

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உண்மைக்கு புறம்பானது என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எங்களை ஆளாக்கியவர். ஜெயலலிதா எங்களுக்கு தெய்வம், கடவுள். ஆறுமுகசாமி ஆணையத்தில் என்னை பற்றி கூறியுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. ஒருதலைப் பட்சமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குணமாகி மீண்டு வர வேண்டும் என்று போராடிய லட்சோப லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவன். சுகாதாரத்துறை அமைச்சராக நான் என்னுடைய கடமையை மனசாட்சியோடு செய்துள்ளேன். ஆறுமுகசாமி ஆணையத்தில் சொல்லாததை சொன்னது போலவும், சொன்னதை சொல்லாதது போலவும் கருத்துக்கள் திரித்து கூறப்பட்டுள்ளன.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறப்பட்ட இந்த கருத்துக்கள் இந்திய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இவை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல் உள்ளது. இருப்பினும் பொது வாழ்க்கையில் உள்ள நாங்கள் சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி, நேர்மையோடும் நெஞ்சுறுதியோடும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story