தம்பதி மீது தாக்குதல்; விவசாயி கைது


தம்பதி மீது தாக்குதல்; விவசாயி கைது
x

கீழ்பென்னாத்தூர் அருகே நிலப்பிரச்சினையில் தம்பதியை தாக்கியதாக விவசாயி கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர் அருகே நிலப்பிரச்சினையில் தம்பதியை தாக்கியதாக விவசாயி கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

நிலப்பிரச்சினை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு அருகே உள்ள தேவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40), ராணுவ வீரர். இவரது அக்காள் கணவர் அருணாச்சலம் (48), விவசாயி. இவர்களுக்கு இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரர் கோவிந்தராஜ் தனது நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அப்போது அங்கு வந்த அருணாச்சலம், கோவிந்தராஜிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அருணாச்சலம் உருட்டு கட்டையால் கோவிந்தராஜை தாக்கியுள்ளார்.

அப்போது தடுக்க வந்த அவரது மனைவி கல்பனாவை கோவிந்தராஜின் அண்ணன் பழனியின் மனைவி வனிதா, இவரது அப்பா மணி மற்றும் அருணாச்சலத்தின் மனைவி வள்ளியம்மாள் ஆகியோர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தம்பதி படுகாயம்

இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ், கல்பனா ஆகியோர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து கல்பனா கொடுத்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து, அருணாச்சலத்தை கைது செய்தார்.

மேலும் தலைமறைவாகியுள்ள 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story