சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு: பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கிறார்கள்


சட்டப்பேரவை கூட்டத்தொடர்  இன்றுடன் நிறைவு: பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கிறார்கள்
x
தினத்தந்தி 22 Feb 2024 2:50 AM GMT (Updated: 22 Feb 2024 4:21 AM GMT)

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது

சென்னை,

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அவர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. இதற்காக பேரவை விதி எண்ணிலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து 15-ம் தேதி சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

19-ம் தேதி 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஏராளமான புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து 20-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது இந்த பட்ஜெட் உரையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு வேளாண் சார்ந்த அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைய கூட்டத்தில் பொது பட்ஜெட் , வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.


Next Story