உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை - ஐகோர்ட்டில் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் விளக்கம்


உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை - ஐகோர்ட்டில் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் விளக்கம்
x

உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை என்று ஐகோர்ட்டில் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் உரிய தகுதியை பெற்றிருக்கவில்லை எனவும், தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முறையாக தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது என்று கடந்த வாரம் அறிவித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பேராசிரியர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு பேராசிரியர்களை பணிக்கு அனுமதிக்கவில்லை என்றும் வருகை பதிவேடானது கல்லூரியினுடைய முதல்வர்களின் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது என்றும் புகார் தெரிவித்தார்.

அதே சமயம் அறக்கட்டளை தரப்பில், பேராசிரியர்கள் எவரும் பணிக்கு வரவில்லை என்றும் அவர்கள் பணிக்கு வருவதை யாரும் தடுக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை எண்ணிடும்படி பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், பேராசிரியர்கள் வருவதை தடுக்கவில்லை என்று கூறும் கல்லூரி முதல்வர்கள், இது தொடர்பாக விளக்க மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் இருந்தால் அதையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்து இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளி வைத்தனர்.


Next Story