பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்-கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்-கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:46 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜன் சேதுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் வரவேற்று பேசினார். மாநில பொது செயலாளர் சந்தான கிருஷ்ணன் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார், மாநில செயலாளர்கள் செல்வன், பாண்டியன், விஜயராஜ், மாநில அமைப்பு செயலாளர் அசோக்குமார், சிவகங்கை மாவட்ட தலைவர் முத்துவேல், நிர்வாகிகள் சந்திரசேகரன், நாகேந்திரன், கமலஹாசன், இளஞ்செழியன், ஜெய்சன், இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயத்துறை பணியான அக்ரி ஸ்டாக் பணியை செய்யும்படி கிராம நிர்வாக அலுவலர்களை கட்டாயப்படுத்த கூடாது.

பழைய ஓய்வூதிய திட்டம்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட செயல்படாத சிம்கார்டுகளை திரும்ப பெற்று அதற்கு பதிலாக அனைவருக்கும் இணையதள சேவை செலவின தொகையாக மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவியை மீண்டும் டெக்னிக்கல் பதவியாக அறிவிக்க வேண்டும். தற்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டு வருவாய் கணக்குகள் தனியாக உள்ளதற்கு ஏற்ப கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சான்றுகள் வழங்குதல் தொடர்பான களப்பணி விசாரணைக்கு சென்று வருவதற்கு வசதியாக அரசு மூலம் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். எரிபொருள் செலவிடம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகளுக்கு பட்ட படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தென்றல் தமிழோசை நன்றி கூறினார்.


Next Story