1,150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு 5 இடங்களில் கரைக்க ஏற்பாடு


1,150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு 5 இடங்களில் கரைக்க ஏற்பாடு
x

திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1,150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன. இந்த சிலைகள் 5 இடங்களில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1,150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன. இந்த சிலைகள் 5 இடங்களில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தியைெயாட்டி நேற்று முன்தினம் பழம், பூஜைபொருட்கள் வாங்க பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்தனர். நேற்றும் அதிகமாக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் காணபட்டது. பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் நேற்று விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக களிமண்ணால் செய்யப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடந்தது.

அதுமட்டுமின்றி விநாயகர் சிலையை அலங்கரிக்க சாலையோரம் வண்ண அலங்கார குடைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த குடைகளையும் மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். எருக்கம் பூ மாலை விற்பனையும் அதிகமாக நடந்தது.

திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்து அமைப்புகள், பல்வேறு சங்கங்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் வித, விதமாக பிரம்மாண்டமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

அருணாசலேஸ்வரர் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருவண்ணாமலையில் உள்ள இரட்டை பிள்ளையார் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. பொதுமக்கள் சிறிய வகையிலான சிலைகளுக்கு வீடுகளில் சுண்டல், கொழுக்கட்டை, பழங்கள் ஆகியவற்றை படையலிட்டு வழிபட்டனர். மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியிலும், ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

பல்வேறு இடங்களில் 10 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலைகள் அனுமதி பெறப்பட்டு வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள 1150 சிலைகளுக்கு போலீசாரும் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 200 பயிற்சி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலீசார் பாதுகாப்பு

விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. திருவண்ணாமலையில் நாளை மாலையில் நடைபெற உள்ளது. காந்தி சிலை அருகே விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் புறப்படுகிறது.

அந்த சிலைகள் தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரை குளத்தில் கரைக்கப்பட உள்ளன. அதேபோல் வந்தவாசி மற்றும் செய்யாறில் வருகிற 3-ந் தேதியும், ஆரணியில் 4-ந் தேதியும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோணிராயன்குளம், வந்தவாசி 5 கண் வாராபதி, பூமா செட்டிகுளம், போளூர் ஏரி ஆகிய நீர் நிலைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வழிகாட்டுதல் படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.


Next Story