ஏரல் தாலுகா அலுவலகத்தில்விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

ஏரல் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஏரல்:
ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் வளாகத்தில் கன்வீனர் நம்பிராஜன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், வடகால் பாசனத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்துள்ள வாழைகள் தண்ணீர் இல்லாமல் கருகி வருவதை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக் கோரி நெல்லை தாமிரபரணி செயற் பொறியாளர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் இதுவரை தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் கருகி வரும் வாழைகளை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி வருகிற 26-ந்தேதி ஏரல் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் சேர்வைக்காரன்மடம் லிங்கதுரை, தனுஷ்கோடி ஆறுமுகமங்கலம் சுப்புத்துரை, கூட்டம்புளிபட்டு முருகேசன், முக்காணி சின்னதம்பி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.






