ஈரோட்டில் ரெயில் விபத்து ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி


ஈரோட்டில் ரெயில் விபத்து ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

ஈரோட்டில் ரெயில் விபத்து ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு

ஈரோடு ரெயில் என்ஜின் பணிமனை பகுதியில் ரெயில் விபத்து ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஒத்திகை நிகழ்ச்சி

ஈரோடு -சென்னிமலை ரோட்டில் உள்ள ரெயில் என்ஜின் பணிமனை பகுதியில் ரெயில் விபத்து ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு

சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்கா தலைமை தாங்கினார். கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் பி.சிவலிங்கம் முன்னிலை வகித்தார். ஈரோடு கோட்ட பாதுகாப்பு அலுவலர் தட்சணாமூர்த்தி ரெயில் பாதுகாப்பு குறித்து விளக்கினார்.

இதைத்தொடர்ந்து ரெயில் விபத்துக்கள் நடக்கும்போது, ரெயில்வே துறை ஊழியர்கள், பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் எவ்வாறு நடந்து கொள்வது. தீயணைப்பு, ஆம்புலன்ஸ், மீட்பு வாகனங்களை அழைப்பது. அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிப்பது.

ரெயில் விபத்துகள்

மேலும் மீட்கப்படும் பயணிகளுக்கு முதல் உதவி சிகிச்சை வழங்குதல், அவசர சிகிச்சை வழங்கி, மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல், அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தல் போன்றவைகளின் செயல்பாடுகளை ரெயில்வே போலீசார் தத்ரூபமாக செய்து காட்டினர். அதுமட்டுமின்றி ரெயில் பயணிகளின் பொருட்கள், ரெயில்வே துறைக்கான சொத்து மற்றும் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை, ரெயில்வே போலீசார் செய்து காட்டினர். ரெயில் விபத்துக்கள் நடக்கும்போது விபத்து நேர அவசர செயல்பாடுகள், பாதுகாப்பு, திறம்பட செயல்படுதல் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் ரெயில்வே போலீசார், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story