கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழா 26-ந் தேதி நடக்கிறது


கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழா 26-ந் தேதி நடக்கிறது
x

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழா வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை- மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடித்திருவாதிரை விழா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா (அரியலூர்), க.சோ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசும்போது கூறியதாவது:-

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் சதயவிழா கொண்டாடுவதை போல் கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிறுவிய மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கும் அரசு விழா கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவான ஆடித்திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. சென்ற ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக இவ்விழா கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழா வெகு விமரிசையாக வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தி பொதுமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், நமது மாமன்னர் ராஜேந்திர சோழன் சிறப்பை வருங்கால சந்ததியினர் அறிந்து பயன்பெறும் வகையிலும் கங்கைகொண்ட சோழபுரம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சாத்தனூர் கல்மரம், தொல்லியல் ஆய்வகம் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் ஆடித்திருவாதிரை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்வதின் மூலம் வரும் ஆண்டுகளில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவிற்கு தொடர்ந்து வருவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மாவட்ட நிலை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை அனைவருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story